‘மொட்டு’ எம்.பிக்கள் அழுத்தம்; பறிபோகின்றது பீரிஸின் பதவி.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜி.எல். பீரிஸை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் கலந்துரையாடி முடிவொன்றை எடுப்பதற்காக ‘மொட்டு’க் கட்சியின் விசேட கூட்டம் விரைவில் இடம்பெறவுள்ளது என்று கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி தீர்மானித்திருந்தது. கட்சியின் பொதுச்செயலாளரால் இது தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், கட்சியின் தவிசாளரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்கினார். அவரின் பெயரையும் வழிமொழிந்தார். தற்போது டலஸ் அணியில் முக்கிய நபராக அவர் திகழ்கின்றார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 16 பேர் கொண்ட எம்.பிக்கள் குழு டலஸ் அழகப்பெரும தலைமையில், சுயாதீனமாகச் செயற்பட்டு வருகின்றது .

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பீரிஸிடமிருந்து தவிசாளர் பதவியைப் பறிக்குமாறு, கட்சித் தலைமையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், டலஸ் அணியில் செயற்படும் உறுப்பினர்களிடமிருந்து ‘மொட்டு’க் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியும் பறிக்கப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.