உத்தரப்பிரதேச ஹோட்டலில் பயங்கர தீ விபத்து – 4 பேர் பலி, 20 பேர் மருத்துவமனையில் அனுமதி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தின் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் லிவான என்ற சொகுசு ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலில் காலை 7 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த உணவகத்தின் இரண்டாவது தளத்தில் முதலில் தீ பரவிய நிலையில், பின்னர் அருகேயுள்ள மற்ற தளங்களிலும் தீ பரவத் தொடங்கியுள்ளது.

இதையடுத்து ஹோட்டலில் தங்கியிருந்து சுமார் 40க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற முயன்றுள்ளனர். ஆனால், தீ வேகமாகப் பரவியதால் அங்கு பலரும் வெளியேற முடியாமல் சிக்கி தவித்துள்ளனர். அத்துடன் ஹோட்டலில் முன்பக்க வழியை தவற அவசர கால வழிகள் இல்லை. எனவே மீட்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் முயற்சியில் 15 தீணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. மீட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 13 ஆம்புலன்ஸ்சுகளும் அங்கு தயார் நிலையில் இருந்துள்ளன. சுமார் 20 பேர் மயக்க நிலையில் மீட்கப்பட்டனர். அவர்கள் அங்குள்ள சியாமா பிரசாத் முகர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், தீயணைப்பு துறை காவல் தலைவர், மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் உள்ளிட்டோர் சென்று நிலைமை கண்காணித்து வருகின்றனர்.

மீட்பு பணிகள் துரிதமாக நடைபெறும் நிலையில், சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் லக்னோ மருத்துவமனையில் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும், சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மின்சாரம் ஷார்ட் சர்க்யூட் ஆனதே இந்த விபத்திற்கான காரணமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.