பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த இளம்பெண்: ஆத்திரத்தில் கொலை செய்த பாஜக பிரமுகர் மகன் கைது!

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னணி பாஜக பிரமுகர் வினோத் ஆரியா. இவர் முந்தைய பாஜக ஆட்சியில் அமைச்சராகவும் இருந்துள்ளார். இவருக்கு புல்கித் ஆர்யா என்ற மகன் உள்ளார். புல்கித் ஆர்யா, லக்ஷமன் ஜூலா என்ற பகுதியில் வனந்த்ரா என்ற பெயரில் ரிசார்ட் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த ரிசார்ட்டில் அங்கிதா பண்டாரி என்ற 19 வயது பெண் வரவேற்பாளராக வேலை செய்து வந்துள்ளார்.

ஸ்ரீகேட் என்ற கிராமத்தைச் சேர்ந்த அங்கிதா, கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர்தான் புல்கித்துக்கு சொந்தமான ரிசார்ட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்னர் ரிசார்ட்டிற்கு வேலைக்குச் சென்ற அங்கிதா, வீடு திரும்பாமல் மாயமாகியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், குடும்பத்தினர் மற்றும் சமூக வலைத்தளங்களின் தொடர் அழுத்தம் காரணமாக காவல்துறை புல்கித் ஆர்யா மற்றும் ரிசார்ட்டில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். முதலில் புல்கித் ஆர்யா உண்மையை மறைக்கும் விதமாக மழுப்பி பேசி வந்த நிலையில், பின்னர் அங்கிதாவை தாங்கள்தான் கொலை செய்தோம் என ஒப்புக்கொண்டுள்ளனர்.

சம்பவ தினத்தன்று அங்கிதாவுக்கும், புல்கித்திற்கும் அருகே உள்ள சீலா என்ற கால்வாய் அருகே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில்,ஆத்திரமடைந்த புல்கித் அங்கிதாவை கால்வாயில் தள்ளி கொலை செய்துள்ளார். அத்துடன் அங்கிதா பயன்படுத்திய செல்போனையும் அதே கால்வாயில் வீசி எறிந்துள்ளார்.

அங்கிதாவை புல்கித் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்திய நிலையில், அங்கிதா அதை ஏற்க மறுத்துள்ளார். இது தொடர்பான வாக்குவாதம் காரணமாகவே அங்கிதாவை புல்கித் கால்வாயில் தள்ளி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அப்பகுதி மக்கள் வீதியில் போராட்டம் நடத்திய நிலையில், பாஜக பிரமுகர் மகன் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் காவல்துறை விசாரணை செய்ய மறுப்பதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. விவகாரம் பூதாகரமான நிலையில் ரிசார்ட் முதலாளியான புல்கித் ஆர்யா, மேலாளர் சவுரப் பாஸ்கர் மற்றும் உதவி மேலாளர் அங்கித் குப்தா ஆகிய மூவரை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் புஷ்கர் தாமி உத்தரவிட்ட நிலையில், ரிசார்டை புல்டோசர் வைத்து இடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கோட்வார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.