தேசிய மக்கள் சக்தியே தமிழருக்குத் தீர்வு வழங்கும்! – அநுரகுமார உறுதி.

“நினைவேந்தலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது அடிப்படை மனித உரிமை மீறலாகும். வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் அமைதியாகவே நடத்துகின்றனர். அடிப்படை அரசியல் அறிவு அற்றவர்களே இதற்கு எதிராகக் கண்டனங்களை வெளியிடுகின்றனர். தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால் தமிழர்களுக்கான உரிமைகளையும், தீர்வுகளையும் வழங்கியே தீரும்.”

இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தமிழினத்தால் ‘தியாக தீபம்’ என்று போற்றப்படும் திலீபனை வடக்கு, கிழக்கில் பகிரங்கமாக நினைவேந்தியவர்களை உடனடியாகச் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இங்கு போரிலோ அல்லது வேறு எந்தச் சந்தர்ப்பத்திலோ உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் அல்லது அவர்களின் இனத்தவர்கள் அமைதியாக நினைவேந்த முடியும். இதற்கு எதிராக எவரும் கருத்துக்களை வெளியிட முடியாது.

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையைப் பறித்துவிட்டு நாட்டில் எப்படி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்? மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரச தரப்பினரும் அதன் நேர்வழி, மறைவழி பங்காளிகளும் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தியே வந்தார்கள்.

தமிழ் மக்களுக்கான உரிமைகளையும், தீர்வுகளையும் வழங்க எந்த அரசும் முன்வரவில்லை. இந்த நாட்டில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால் தமிழர்களுக்கான உரிமைகளையும், தீர்வுகளையும் வழங்கியே தீரும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.