ஜனாதிபதியைச் சந்திக்கத் தயராகும் யாழ். வலிகாமம் வடக்கு மக்கள்!

யாழ். குடாநாட்டில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திப்பதற்கு 2 ஆயிரத்து 500 குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கில் மயிலிட்டி மற்றும் பலாலியில் உள்ள காணிகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

மயிலிட்டி துறைமுகத்தை கடற்றொழில் மக்களின் வாழ்வாதாரத்துக்குப் பயன்படுத்த முடியும்.

பலாலி பிரதேசத்தை விவசாயத்தில் ஈடுபடும் குடும்பங்கள் பயன்படுத்த முடியும்.

எனினும், அந்தக் காணிகளை மீள்குடியேற்றத்துக்கு விடுவித்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்று வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றத்தின் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் தெரிவித்தார்.

வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் கூற்றுப்படி, 1990 இல் இலங்கை இராணுவத்தினரால் சுமார் 6 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

3 ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் உரியவர்களிடம் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் காங்கேசன்துறை, கீரிமலை, வறுத்தலவிளான் மற்றும் கட்டுவன் ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் காணிகள் இன்னமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன என்று குணபாலசிங்கம் தெரிவித்தார்.

மீதமுள்ள 3 ஆயிரம் ஏக்கர் நிலம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து தமது குறைகளை விளக்குவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக குணபாலசிங்கம் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.