அம்ஷிகாவுக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம்!

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் டில்ஷி அம்ஷிகா என்ற பாடசாலை மாணவி உயிரை மாய்த்துக்கொள்வதற்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும், மாணவின் குடும்பத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அவர்கள் கொட்டாஞ்சேனை விவேகாந்தர் சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, ஹின்னி அப்புஹாமி மாவத்தையில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு முன்னாலும் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அத்துடன், கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் அமைந்துள்ள மாணவியின் வீட்டுக்கு முன்னால் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு மாணவியின் பெற்றோருக்கு ஆறுதலைத் தெரிவித்ததுடன், மாணவியின் மரணத்துக்குக் காரணமானவர்கள் தண்டனையின் முன்நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவித்து தங்களது ஆதரவு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததுடன் உயிரிழந்த மாணவிக்காக ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.
இதேவேளை, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள மாணவி ஆரம்பத்தில் கல்வி பயின்ற பாடசாலைக்கு முன்னாலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.