அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை இலங்கை மக்களுக்கு பெற்றுத்தந்து உதவ ஜப்பான் முன்வந்துள்ளது.

கோவிட் நோய்த்தொற்றுக்கு எதிரான எமது போராட்டத்திற்கு உதவியாக, ஆறு இலட்சம் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை எமது நாட்டிற்குப் பெற்றுத்தருமாறு – ஜப்பான் பிரதமர் திரு. யொசிஹிடே சுகா (Mr. Yoshihide Suga) அவர்களிடம் நான் முன்வைத்த கோரிக்கைக்குச் சாதகமான பதில் ஒன்றை அவர் அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் திரு. சுகியாமா அக்கிரா (Mr. Sugiyama Akira) அவர்கள், இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகம் வருகைதந்து தமது பிரதமரின் சாதகமான பதிலை என்னிடம் தெரிவித்தார்.

கொவிட் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான எமது போராட்டத்திற்காக – மருத்துவ மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்களையும் தந்துதவுமாறு நான் ஏற்கெனவே முன்வைத்திருந்த கோரிக்கைக்கும் ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

கப்பல் தீ விபத்தினால் எமது சமுத்திரத்தில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் நாம் விரைவாகச் செயற்படுவதற்குத் தேவையான தொழிநுட்ப உதவிகளை ஜப்பானிடமிருந்து பெற்றுக்கொள்வது தொடர்பிலும் ஜப்பான் தூதுவருடன் நான் இன்று உரையாடினேன்.

ஜப்பான் பிரதித் தூதுவர் கித்தமுரா டொசிகிரோ (Kitamura Toshihiro), முதலாவது செயலாளர் இமமுரா காயோ (Imamura Kayo), எனது செயலாளர் பி. பீ. ஜயசுந்தர, எனது தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.