விமர்சனம் டி.எஸ்.பி.

திண்டுக்கல் மாவட்டத்தில் பூ வியாபாரியின் மகனாக இருக்கிறார் விஜய் சேதுபதி. அரசாங்க உத்யோகத்தில் மட்டுமே சேரவேண்டும் என்று தந்தை ஆசைப்படுவதால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் விஜய் சேதுபதி.

அதே ஊரில் கல்லூரியில் படிக்கும் நாயகி அனுகீர்த்தியுடன் விஜய் சேதுபதிக்கு பழக்கம் ஏற்படுகிறது. நாளடைவில் இது காதலாக மாறுகிறது.

இந்த சமயம் விஜய் சேதுபதியின் தங்கைக்கு திருமணம் நடக்கிறது. இதற்காக வேறு ஊரில் இருந்து திண்டுக்கல்லுக்கு விஜய் சேதுபதியின் நண்பர்கள் வருகிறார்கள். திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் விஜய் சேதுபதியின் நண்பர்களுக்கும் ஊரில் கட்டப்பஞ்சாயத்து செய்து தாதாவாக இருக்கும் பிரபாகருக்கும் மோதல் ஏற்படுகிறது.

இந்த சண்டையில் விஜய் சேதுபதி வில்லன் பிரபாகரனை மார்க்கெட்டில் பொதுமக்கள் முன்னிலையில் அடித்து விடுகிறார். இதனால் கோபமடையும் பிரபாகர், விஜய் சேதுபதியை கொன்றே தீருவேன் என்று முடிவெடுக்கிறார். தங்கையின் திருமணத்திற்காக ஒதுங்கி மறைந்து வாழும் விஜய் சேதுபதி, டி.எஸ்.பி.யாக ஊருக்கு வருகிறார்.

இறுதியில் விஜய் சேதுபதிக்கும், வில்லன் பிரபாகரனுக்கும் இடையேயான சண்டை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்து தனித்துவம் காண்பிக்கும் விஜய் சேதுபதி, இந்த படத்தில் எதார்த்தமாக நடித்து கமர்ஷியல் ஹீரோவாக பளிச்சிடுகிறார். தனக்கே உரிய பாணியில் நக்கல், நையாண்டி, உடல் மொழி என அசத்தி இருக்கிறார் விஜய் சேதுபதி.

நாயகியாக அறிமுகமாகி இருக்கும் அனு கீர்த்தி, துறுதுறு நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறார். விஜய் சேதுபதியுடன் பேசும் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். போலீசாக வரும் ஷிவானி கொடுத்த வேலையை செய்து இருக்கிறார். ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார் புகழ். வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் பிரபாகர். விஜய் சேதுபதிக்கு இணையாக போட்டி போட்டு நடித்து இருக்கிறார். விஜய் சேதுபதியின் தந்தையாக நடித்துள்ள இளவரசுவின் நடிப்பு சிறப்பு.

கமர்சியல் படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் வைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் பொன்ராம். காமெடி, ஆக்ஷன் என திரைக்கதையில் சுவாரஸ்யம் சேர்த்து இருக்கிறார் இயக்குனர். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

டி. இமான் இசையில் உருவாகி இருக்கும் அட்வைஸ், மற்றும் திருமண பாடல் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை மற்றும் கலர்ஃபுல்லான ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.