தாழமுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும்.

நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என அறிவிக்கபடப்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், மழையுடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்துக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில் அகலவத்தை பிரதேசத்திலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதன்படி, களுத்துறை மாவட்டம் – அகலவத்தை பிரதேசத்தில் 344 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும்,

வலல்லாவிட்ட பிரதேசத்தில் 290 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், ஹங்வெல்ல பிரதேசத்தில் 270 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், காலி மாவட்டம் – வந்துரம்ப பிரதேசத்தில் 236 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், ஹொரண பிரதேசத்தில் 243 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், பதிவாகியுள்ளன.

இதேவேளை, நாட்டின் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின் நியாகம பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, வலல்லாவிட்ட, இங்கிரிய, அகலவத்த, ஹொரணை மற்றும் புளத்சிங்ஹள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  நாட்டின் 2 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையான செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, நாகொட மற்றும் பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்தங்கள் மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, மக்கள் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி முதல் ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையிலான கடற்பிராந்தியத்திலும், காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலான  கடற்பிராந்தியத்திலும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

குறித்த கடற்பிராந்தியங்களின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காணப்பட்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக இருக்குமெனவும் எச்சரிக்கை விடுக்கப்கட்டுள்ளது.

எனவே, கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் பிரயாணிகள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.