நாடாளுமன்றத்திற்கு கருப்பு உடையில் வருகை தந்து எதிர்ப்பை தெரிவித்த தமிழ்நாடு எம்.பிக்கள்!

ராகுல் காந்தியின் பதவி நீக்கத்தைக் கண்டித்து நாடாளுமன்றத்துக்கு தமிழக எம்.பிக்கள் கருப்பு உடை அணிந்து சென்றனர். அவர்கள் கூட்டாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, அவர் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெறும் ஒருவர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-இன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுவார். தற்போது ராகுல் காந்தி இந்த பிரிவிலேயே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதி காலியனதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்கள் நேற்று நாடு தழுவிய சத்தியாகிரக போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். அதன்படி, டெல்லி தொடங்கி அனைத்து மாநிலங்களில் உள்ள காந்தி சிலைகள், மாவட்ட காங்கிரஸ் தலைமை அலுவலகங்கள் முன்னர் இந்த சத்தியாகிரக போராட்டம் காலை 10 மணி தொடங்கி மாலை நடைபெற்றது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கருப்பு உடை அணிந்துவருகை தந்தனர். அதேபோல, நாடாளுமன்றத்துக்கு தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பிக்கள் அனைவரும் கருப்பு உடைந்து அணிந்து சென்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த கனிமொழி, கலாநிதி வீராசாமி, செந்தில் குமார், டி.ஆர்.பாலு உள்ளிட்ட அனைத்து எம்.பிக்களும் கருப்பு உடை அணிந்து சென்றனர். அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.