இனப்பிரச்சினைதான் நாட்டின் முன்னேற்றத்தைக் குறைத்தது! – ஒத்துக்கொள்கின்றார் ரணில்.

“இனப்பிரச்சினைதான் நாட்டின் முன்னேற்றத்தைக் குறைத்தது. எனவே, இலங்கை அபிவிருத்தியடைய வேண்டுமானால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு விரைந்து காணப்பட வேண்டும்” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தால் நடத்தப்பட்ட ‘சர்வதேச நாணய நிதியம் மற்றும் அதற்கு அப்பால்’ என்ற தொனிப்பொருளிலான உரையாடலில் பிரதான உரையை ஆற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பசுமைப் பொருளாதாரத்துக்கான இலங்கையின் சாத்தியக்கூறுகள் நன்றாக இருக்கின்றன. இலங்கை உடனடியாக அதில் இறங்கி அதனை ஆரம்பிக்க வேண்டும்.

நாட்டின் வளங்களை அதிகமாக வீணடித்த பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் அல்லது மின்சார சபைக்கு ஆதரவளிக்கவன்றி, வரியவர்கள் மற்றும் நலிவடைந்தவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கே பணம் தேவைப்படுகின்றது.

டி.எஸ். சேனநாயக்கவின் முன்மொழிவுகளைக் கட்டியெழுப்பாதது மற்றும் 1965 இல் ஷெனோய் அறிக்கையை நடைமுறைப்படுத்தாதது உட்பட இலங்கையின் அபிவிருத்தியில் தவறவிட்ட வாய்ப்புக்களைப் பட்டியலிடலாம்.

1978 இல் இனப்பிரச்சினையானது நாட்டின் முன்னேற்றத்தைக் குறைத்தது. மேலும் நாடு மீண்டும் தனது நிலைப்பாட்டை எடுப்பதற்கான வாய்ப்பை இழந்தது.

இதுவே இலங்கைக்கு ஒரு தீர்க்கமான தெரிவை மேற்கொண்டு, முன்னோக்கிச் செல்வதற்கு அல்லது மீண்டும் பின்னோக்கிச் செல்லும் அபாயத்தை எதிர்கொள்வதற்கான கடைசி வாய்ப்பு.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு வளமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது அவசியமாகும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.