தையிட்டிக்கு மல்லாகம் நீதிவான் கள விஜயம்! போராட்டங்களை முன்னெடுக்க அனுமதி.

யாழ்., வலிகாமம் வடக்கு – தையிட்டி பௌத்த விகாரை அமைந்துள்ள காணிக்கு முன்னுள்ள தனியார் காணியின் எல்லைப் பகுதியினுள் எவ்வித குழப்பங்கள், கோஷங்கள் இன்றி அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்று இன்று மாலை நேரில் கள விஜயம் மேற்கொண்டு விபரங்களை ஆராய்ந்த மல்லாகம் நீதிவான் காயத்திரி தெரிவித்தார்.

இதேவேளை, தையிட்டிப் போராட்டக் களத்தில் இன்று காலை கைது செய்யப்பட்ட ஜந்து பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது என்று சட்டத்தரணி க. சுகாஷ் தெரிவித்தார்.

தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனைச் சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை எதிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாக பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து நேற்று மாலை கண்டனப் போராட்டத்தைத் தொடங்கினர்.

விகாரையைச் சுற்றியுள்ள காணிகளையாவது விடுவிக்குமாறு கோரியும், சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அதனைத் தொடர்ச்சியாக நாளை வெசாக் தினம் வரை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

தொடர் போராட்டத்தை முன்னெடுப்பதற்காகக் குறித்த பகுதியில் பந்தல் அமைக்கப் போராட்டக்காரர்கள் முற்பட்ட நிலையில் பொலிஸார் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.

இந்தநிலையில் தனியார் காணியொன்றில் பந்தல் அமைக்க முயன்றபோதும் அதற்கு இடமளிக்காத பொலிஸார், போராட்டக்காரர்களை அச்சுறுத்தியதுடன் பந்தல் அமைப்பதையும் தடுத்து நிறுத்தினர். அத்துடன் போராட்டக்காரர்களையும் அங்கிருந்து அகற்றினர். எனினும், விகாரைக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட குழுவொன்று நேற்று மாலை முதல் பொலிஸாரின் முற்றுகைக்குள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.