இறந்த ராஜகுமாரியை இரு போலீசார் தாக்கியதை கண்டேன் : சாட்சி வாக்குமூலம்

வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாகக் கூறப்படும் வீட்டுப் பணிப்பெண் ராஜகுமாரியின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் குறித்த தெளிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் இன்று (21) உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல மேலும் உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான மரண விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள உத்தியோகத்தர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் தலைமையில் சாட்சியமளித்த மகேந்திரன் சுரேஸ் என்ற நபர் வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்குள் இராஜகுமாரி பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்டதைக் தாம் கண்டதாக தெரிவித்தார்.

ஒரு நாள் புறக்கோட்டை பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் தான் இருந்த போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வந்து கைவிலங்கிட்டு வாகனத்தில் ஏற்றி பொரளை கோட்டா வீதியில் உள்ள ராஜகுமாரி வேலை செய்த வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக சாட்சி மேலும் கூறினார்.

பின்னர் ராஜகுமாரியை அழைத்து வந்த போலீசார் தனக்கு போடப்பட்டிருந்த விலங்கின் மற்றைய கைவிலங்கை ராஜகுமாரியின் கையில் போட்டதாகவும் சாட்சி கூறினார்.

ராஜகுமாரியை அழைத்துச் சென்றபோது அவருக்கு எவ்வித நோய் உள்ளவராகக் காணப்படவில்லை எனவும், அவர் நன்றாக நடந்தே வந்ததாகவும் சாட்சி கூறினார்.

வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் போது வாகனத்திற்குள் இருந்த பொலிஸ் அதிகாரி ராஜகுமாரியிடம், “மோதிரம், சென்ட் போத்தல், காலணி ஆகியவற்றைத் திருடிச் சென்றாய்தானே” என கேட்டதாகவும் சாட்சி குறிப்பிட்டுள்ளார்.

தானும் ராஜகுமாரியும் வெலிக்கடை காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அங்கிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தன்னையும், ராஜகுமாரியையும் தாக்கியதாகவும் அவர்களில் ஒருவர் மொட்டை தலையுடையவர் எனவும் மற்றவர் ஒல்லியான உயரமானவர் எனவும் சாட்சியாளர் தெரிவித்தார்.

ஒல்லியான உயரமான அதிகாரி இறந்து போன ராஜகுமாரியை ரப்பர் குழாயால் தாக்கியதை தான் பார்த்ததாக சாட்சி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், “சுதர்மா மேடம்” வந்து அடிக்க வேண்டாம் என்றும், பிரச்சினையை தீர்க்குமாறும் கேட்டுக் கொண்டதாக சாட்சி மேலும் தெரிவித்தார்.

அதன்பின், அடுத்தகட்ட வழக்கு விசாரணை, எதிர்வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.