சாணக்கியன் எம்.பியைத் தாக்க முற்பட்ட பிள்ளையான் கட்சி உறுப்பினர்கள் போராட்டக்காரர்களால் நையப்புடைப்பு!

Batticaloa Bus Stand.mp4

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டாரத் தலைவர் உள்ளிட்ட இருவர் இன்று (17) தாக்குதல் நடத்த முற்பட்டனர். இதையடுத்துக் குறித்த இருவரும் மக்களால் நையப்புடைக்கப்பட்டனர்.

அண்மையில் மன்னம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும், மட்டக்களப்பில் இயங்கி வரும் பஸ் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளின் பிரச்சினை தொடர்பாகவும் மட்டக்களப்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சட்டவிரோதமான முறையில் இயங்கி வரும் பஸ்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், கிழக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகாரியின் அசமந்தச் செயற்பாட்டின் காரணமாக 11 உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன என்றும், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர்.

குறித்த விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கும் போது உள்நுழைந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் இருவர், நாடாளுமன்ற உறுப்பினரைத் தாக்குவதற்கு முற்பட்டதன் காரணமாக போராட்டக்காரர்களால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் இருவர் நையப்புடைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

இன்று பொலிஸாரின் உதவியுடன் பஸ்களின் அனுமதிப் பத்திரங்களையும் சாணக்கியன் எம்.பி. அதிரடியாகச் சோதனை செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.