கற்பிட்டி விபத்தில் ஒருவர் பரிதாப உயிரிழப்பு!

கற்பிட்டி – ஏத்தாளை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கற்பிட்டி – பாலக்குடா , கரடிப்பானி வத்தையைச் சேர்ந்த தெஹிவலகே ஜானக ஏரங்க கொஸ்தா (வயது 37) எனும் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தலவில பகுதியில் இருந்து நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று பின்னால் சென்று மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, பலத்த காயத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் , உயிரிழந்த நபரின் சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பிரதேச பரிசோதனை மற்றும் மரண விசாரணை என்பன இடம்பெற்றன.

புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மரண விசாரணையை நடத்தினார்.

வீதி விபத்தால் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளது எனத் தீர்ப்பு வழங்கி சடலத்தை குடும்பத்தினரிடம் அவர் ஒப்படைத்தார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.