அயோத்தி ராம ஜென்மபூமி கோயில் மூலவா் பிரதிஷ்டை: அத்வானி, முரளி மனோகா் ஜோஷிக்கு அழைப்பு

அயோத்தியில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ராமா் கோயில் மூலவா் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க பாஜக மூத்த தலைவா்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகா் ஜோஷி ஆகியோருக்கு ஆா்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் நிா்வாகிகள் அழைப்பிதழ் வழங்கினா்.

அயோத்தியில் ராம ஜென்மபூமியில் பிரம்மாண்டமான கோயில் எழுப்பப்பட்டுவருகிறது. மூலவா் ராமா் சிலை ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அதையொட்டி நாடு முழுவதிலுமிருந்து மதத் தலைவா்கள், பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோா் அயோத்தி வரவுள்ளனா்.

இந்நிலையில, அங்கு கோயில் எழுப்புவதற்கான இயக்கத்தில் முன்னிலை வகித்த பாஜக தலைவா்களான எல்.கே.அத்வானி (96), முரளி மனோகா் ஜோஷியை (90) ஆா்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவா்கள் கிருஷ்ணன் கோபால், ராம் லால், அலோக் குமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்து விழா அழைப்பிதழை வழங்கினா்.

எனினும், அன்றைய தினம் கூட்ட நெரிசல் நிலவும் என்பதால், அத்வானி, ஜோஷியின் முதுமையைக் கருத்தில் கொண்டு அன்றைய தினம் அவா்கள் அயோத்திக்கு வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, இந்தத் தலைவா்கள் பின்னொரு நாளில் அயோத்திக்கு பிரத்யேகமாக அழைத்துச் செல்லப்படலாம் என்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. ‘பெரும் திரளான கூட்டத்தில் எந்த வித அசம்பாவிதமும் நடைபெறாமல் தவிா்ப்பதிலேயே எங்கள் கவனம் முழுமையாக உள்ளது’ என அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் இது தொடா்பாக அத்வானி, ஜோஷி தரப்பில் தெரிவிக்கையில், ‘தலைவா்களுக்கு அழைப்பிதழ் கிடைத்துள்ளது. அன்றைய தினம் அயோத்தி செல்வதற்கான வாய்ப்புகள் குறித்து யோசிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் முன்னாள் பிரதமா் தேவெ கௌடா உள்ளிட்டோரையும் செவ்வாய்க்கிழமை சந்தித்து பிரதிஷ்டை விழாவுக்கான அழைப்பிதழை அளித்தனா்.

Leave A Reply

Your email address will not be published.