40 வீதமான தாதியர்கள் நாட்டைவிட்டு ஓட்டம்! – ஜனாதிபதி ரணில் கவலை.

இலங்கையில் பயிற்றுவிக்கப்படும் 100 தாதியர்களில் 30 – 40 பேர் வரையிலானவர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றனர் என்றும், இதே நிலை தொடர்வது சிறந்ததல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

உலகின் உயர்வான சுகாதார சேவையைக் கொண்டிருக்கும் எமது நாட்டின் சுகாதாரத்துறையை மேம்படுத்தி அதனைப் பொருளாதார வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நெதர்லாந்து அரசின் இலகுக் கடன் உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் புதிய கட்டடத்தை மக்கள் பாவனைக்குக் கையளிப்பதற்காக இடம்பெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

வைத்திய மற்றும் தாதியர் சேவைக்காக பயிற்றுவிக்கப்படுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்திடம் தான் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், அதற்கான வசதிகளை மேம்படுத்த வேண்டியிருப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

அதேநேரம் தேசிய வியாபார முகாமைத்துவ பாடசாலையான மற்றும் பசுமை பல்கலைக்கழகத்துக்கான வைத்தியசாலை ஒன்றை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் லயிசியம் வைத்தியசாலையும் அதற்கான கோரிக்கையை விடுத்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேபோல் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களையும் வைத்திய துறைக்குள் உள்வாங்கி நவீன வைத்திய முறைமைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பருத்தித்துறை வைத்தியசாலைக்குப் புதிய கட்டடமொன்றை நிர்மாணித்தமைக்காக நெதர்லாந்து அரசுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

பருத்தித்துறை வைத்தியசாலையின் புதிய அவிருத்திக்காக நெதர்லாந்தின் இலகுக் கடன் முறையின் கீழ் 400 கோடி ரூபா வழங்கப்பட்டிருப்பதோடு, அதனால் வைத்தியசாலையின் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

நினைவுப் படிகத்தை திரைநீக்கம் செய்து புதிய கட்டடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அதனை மேற்பார்வை செய்த பின்னர் வைத்தியசாலை பணிக்குழுவினருடன் சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கிடைக்கப் பெற்றிருக்கும் இந்தப் புதிய வைத்திய வசதிகளை நாட்டின் சுகாதார சேவை முன்னேற்றத்துக்காகச் செயற்றிறனுடன் பயன்படுத்த வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

இந்த வைத்தியசாலையை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும்போது முடிந்த வகையில் ஒன்றுபட்டுச் செயற்படுமாறும் ஆளுநர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹொப்ச்சும் உரையாற்றினார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வைத்தியசாலையின் பணிக்குழாத்தினர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.