ராஃபாவிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றும் இஸ்ரேல்.

இஸ்ரேலிய ராணுவம், காஸாவின் ராஃபா நகரின் சில பகுதிகளிலிருந்து பாலஸ்தீன மக்களை திங்கட்கிழமையன்று (மே 6) வெளியேற்றத் தொடங்கியது.

இஸ்ரேலிய வானொலி ஒன்று, திங்கட்கிழமையன்று முதலில் இத்தகவலை வெளியிட்டது. தெற்கு காஸாவில் உள்ள ராஃபா நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக நம்பப்படும் வேளையில் பொதுமக்கள் வெளியேற்றப்படுவதாகவும் அந்த வானொலி குறிப்பிட்டது.

ராஃபாவின் சில வெளிப்புறப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவதில் இஸ்ரேலிய ராணுவம் கவனம் செலுத்திவருவதாக அந்த வானொலி தெரிவித்தது.

வெளியேற்றப்படுவோர் அருகில் உள்ள கான் யூனிஸ், அல் முவாசி நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களுக்கு இடம் மாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அரபு மொழியில் உள்ள குறுந்தகவல்கள், தொலைபேசி அழைப்புகள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றின் மூலம் ராஃபாவில் வசிக்கும் பாலஸ்தீனர்களை விரிவுபடுத்தப்பட்ட மனிதாபிமான வட்டாரம் என்றழைக்கப்படும் அருதிக்கு இடம் மாறுமாறு இஸ்ரேலிய ராணுவம் கேட்டுக்கொண்டதாக இந்நடவடிக்கைகளை நேரில் கண்டவர்கள் கூறினர். விரிவுபடுத்தப்பட்ட மனிதாபிமான வட்டாரம் ராஃபாவுக்கு சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

திங்கட்கிழமை பிற்பகலில் கிழக்கு ராஃபாவில் பலமுறை வெடிப்புச் சத்தம் கேட்கப்பட்டதாக குடியிருப்பாளர்களும் ஹமாஸ் அமைப்பின் ஊடகத்தைச் சேர்ந்தோரும் கூறினர். சில வீடுகளைக் குறிவைத்து ஆகாயத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ராஃபாவிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கை அபாயகரமான முறையில் பிரச்சினையை மோசமடையச் செய்வதாகும் என்று ஹமாசின் மூத்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் சொன்னார். இதற்குப் பின்விளைவுகள் இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

ராஃபாவில் ஆயிரக்கணக்கான ஹமாஸ் அமைப்பினர் உள்ளனர் என்றும் அந்நகரைத் தன்வசம் கொண்டுவராமல் போரில் தாங்கள் வெற்றி காண வாய்ப்பில்லை என்றும் இஸ்ரேல் கூறிவருகிறது.

ராஃபாவில் பாலஸ்தீனர்கள் சிலர் பிள்ளைகளையும் உடைமைகளையும் கழுதை வண்டிகளில் ஏற்றி வெளியேறினர். வேறு சிலர் மழையால் நீர் தேங்கிய சாலைகள்வழி நடந்தும் சென்றனர்.

வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் ராஃபாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதனால் அங்கு பலரை பலிவாங்கக்கூடிய ராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொள்வது குறித்து ஐரோப்பிய நாடுகளும் அண்டை நாடான எகிப்தும் கவலை அடைந்துள்ளன.

காஸாவில் பிடித்துவைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கு வகைசெய்யும் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை தொடர்கிறது. இந்நிலையில், போரை நிறுத்துமாறு ஹமாஸ் அமைப்பு முன்வைத்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் அது இஸ்ரேல் தோல்வியடைவதற்கு ஈடாகும் என்று அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஞாயிற்றுக்கிழமையன்று (மே 5) கூறினார்.

அதுகுறித்துப் பேசிய கத்தாரில் இருக்கும் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே, திரு நெட்டன்யாகு பேச்சுவார்த்தை சரியாக நடக்கவிடாமல் செய்வதாகக் குறைகூறினார்.

Leave A Reply

Your email address will not be published.