ஜனாதிபதி ஆணைக்குழு ராஜிதவுக்கு அழைப்பாணை : அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 5ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மீண்டும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவில் கடற்படை புலனாய்வு பிரிவுத் தளபதி சுமித் ரணசிங்க செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தான் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டமை அரசியல் ரீதியான பழிவாங்கல் என, குறித்த ஆணைக்குழுவில் கடற்படை புலனாய்வு பிரிவுத் தளபதி சுமித் ரணசிங்க முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாடு தொடர்பாக ராஜித சேனாரத்ன உள்ளிட்ட குழுவினர் பதிலளித்தவர்களாக பெயரிடப்பட்டுள்ளதோடு, ராஜித சேனாரத்ன நேற்று குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகாமையால், அவருக்கு மீண்டும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.