இலேசாகக் காயமுற்ற பயணிகளுக்கு US$10,000 இழப்பீடு வழங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

SQ321 விமானச் சம்பவத்துக்காக மன்னிப்புக் கேட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (SIA) பாதிக்கப்பட்ட 211 பயணிகளுக்கு இழப்பீடு தருவதாக அறிவித்துள்ளது.

கடந்த மே 20ஆம் தேதி விமானம் நடுவானில் கடுமையாக ஆட்டம் கண்டதில் பல பயணிகள் காயமடைந்தனர்.

SQ321 லண்டனிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத அந்தச் சம்பவம் நேர்ந்தது.

சிலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.

73 வயது பயணி மாண்டார்.

இழப்பீட்டின் விவரங்கள் மின்னஞ்சல் வாயிலாக இன்று பயணிகளுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக SIA கூறியது.

இலேசாகக் காயமுற்றவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர் (13,500 வெள்ளி) வழங்கப்படும்.

கடுமையாகக் காயமுற்றவர்கள் உடல்நலம் தேறியதும் நிறுவன அதிகாரிகளை நேரில் சந்தித்துத் தங்களுக்குச் சேரவேண்டிய இழப்பீட்டுத் தொகையைப் பேசி முடிவெடுக்கலாம் என்றது SIA.

கடுமையான காயங்கள் மருத்துவப் பரிசோதனை வழி உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள், நீண்டகால மருத்துவக் கவனிப்பும் பண உதவியும் தேவைப்படும் பயணிகள் ஆகியோருக்கு முன்பணமாக US$25,000 (33,800 வெள்ளி) கொடுக்கப்படும்.

அது அவர்களது உடனடித் தேவைகளைப் பூர்த்திசெய்ய உதவும்.

அவர்களுக்கு வழங்கப்படவிருக்கும் மொத்த இழப்பீட்டுத் தொகையின் ஒருபகுதியாகவும் அது இருக்கும் என்றது நிறுவனம்.

பயணிகள் அனைவருக்கும் விமானச்சீட்டுக்கான முழுத்தொகை திருப்பித் தரப்படும்.

விமானப்பயணம் தாமதமடைந்ததற்கான இழப்பீடும் வழங்கப்படும்.

விமானத்திலிருந்த 18 சிப்பந்திகளுக்கு இழப்பீடு வழங்கும் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.