ஈ.பி.டி.பியின் ஆளுகைக்குட்பட்ட வேலணை பிரதேச சபையின் ‘பட்ஜட்’ நிறைவேற்றம்.

ஈ.பி.டி.பியின் ஆளுகைக்குட்பட்ட
வேலணை பிரதேச சபையின்
‘பட்ஜட்’ இன்று நிறைவேற்றம்

* கூட்டமைப்பு, ஐ.தே.க. எதிர்ப்பு
* உதயசூரியன் ஆதரவு
* சைக்கிள் நடுநிலைமை   

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) ஆளுகைக்குட்பட்ட யாழ்., வேலணை பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கால் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டத்துக்கான விசேட கூட்டம் இன்று (11) சபையின் தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி தலைமையில்  இடம்பெற்றது.

வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 10 உறுப்பினர்களும், எதிராக 9 உறுப்பினர்களும் வாக்களித்த அதேவேளை ஓர் உறுப்பினர் நடுநிலைமை வகித்தார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் 6 உறுப்பினர்கள், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 2 உறுப்பினர்கள், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 10 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் உறுப்பினர் என 9 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்தார்.

20 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக 8 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக 6 உறுப்பினர்களும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் 2 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்ணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக தலா ஓர் உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றனர்.

குறித்த பிரதேச சபையின் 2020, 2019ஆம் ஆண்டுகளுக்கான வரவு – செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.