பிரதமரின் சர்வதேச மனித உரிமைகள் தின செய்தி.

சர்வதேச மனித உரிமைகள் தின செய்தி 2020 டிசம்பர் 10

ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும்.

1950 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 04ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் 317ஆவது பொதுச் சபைக் கூட்டத்தின்போது சர்வதேச மனித உரிமைகள் தினம் முறையாக பிரகடனப்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானத்தின் 423(V) பரிந்துரைக்கமைய அனைத்து அங்கத்துவ நாடுகளுடன் இணைந்து அதனை சர்வதேச தினமாக அங்கீகரித்தது.

அதற்கமைய ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மக்களுக்கும் பிறப்பிலேயே உள்ள அடிப்படை உரிமைகளை பெறுவதற்கான உரிமை மற்றும் சமத்துவத்தை உறுதிபடுத்துவதே இத்தினத்தை பிரகடனப்படுத்துவதன் நோக்கமாகும். அத்துடன், உலகளாவிய மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பில் தெளிவூட்டல், மேம்படுத்தல் மற்றும் மனித உரிமை நிலையை மேம்படுத்தல் என்பன மனித உரிமை தினத்தை கொண்டாடுவதன் நோக்கமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடு என்ற வகையில் இலங்கை 1955ஆம் ஆண்டு மனித உரிமை சாசனத்தை ஏற்றுக் கொண்டது.

நாட்டின் சட்டம் மற்றும் சர்வதேச சட்டம் ஊடாக சட்டபூர்வ உரிமையாக அங்கீகரிக்கப்பட்ட நெறிமுறைக் கொள்கைகளை மனித உரிமை என்பதற்குள் உள்ளடக்கலாம். ஐக்கிய நாடுகள் சபையின் வரையறைக்கமைய நபரொருவரின் மதம், இனம், வதிவிடம், தோலின் நிறம், சொத்துக்கள் ஆகிய எதுவும் அதில் தாக்கம் செலுத்தாது.

அத்துடன், மனித உரிமை நிலையான அபிவிருத்தி நோக்கத்தின் அடிப்படையாகும். இதேவேளை, உலகளாவிய மதிப்புகளின் அடிப்படையில் மனித உரிமை ஊடாக சமத்துவம், கௌரவம், ஸ்திரத்தன்மை, பங்களிப்பு, பொறுப்புக்கூறல், பின்னூட்டல் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய முக்கிய விடயங்களின் முக்கியத்துவம் குடிமக்களின் கவனத்திற் கொள்ளப்படும்.

மனித உரிமையை பாதுகாப்பதன் ஊடாக தனிநபர் வளர்ச்சி போன்றே உலகம் என்ற ரீதியில் ஐக்கியத்துடன் முன்னோக்கி செல்ல முடியும். அத்துடன், மனித உரிமைகள் தினம் வெறும் தத்துவ பேச்சுக்கு மாத்திரம் மட்டுப்படாத நடைமுறை பயன்பாட்டு முக்கியத்துவ அடையாளம் காணப்பட்ட ஒன்றாக அமைய வேண்டும்.

அரசாங்கம் என்ற ரீதியில் நாம் இலங்;கை வாழ் மக்களின் மனித உரிமையை பாதுகாக்க வேண்டும். நாம் ஆட்சிக்கு வந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் மனித உரிமையை பாதுகாத்து, ஒழுக்கமான முறையில் இலங்கை மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க கட்டுப்பட்டிருந்தோம். சுபீட்சத்தின் நோக்கு அரச கொள்கையின் ஊடாக அனைத்து மக்களதும் மனித உரிமைகளை பாதுகாத்து நாட்டினதும், குடிமக்களினதும் நற்பேறுக்காக அரசாங்கம் என்ற ரீதியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம்.

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியிலும் மனித சமூகத்தின் உரிமைகள் மீறப்படாத வகையில் அடிப்படை உரிமைகள் போன்றே தேவைகளுக்காகவும் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்த உண்மையாகும்.

உரிமைகளை அனுபவிப்பது போன்றே, அதனுடன் தொடர்புடைய கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பிலும் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். உலகளாவிய ரீதியில் முகங்கொடுத்துள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு போன்றே, நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக உரிமைகளை வெற்றி கொண்டு, தேவையான கடமைகளை நிறைவேற்றுவதற்கு இம்முறை மனித உரிமைகள் தினத்தில் கைக்கோர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்
பிரதமர்

Leave A Reply

Your email address will not be published.