வடக்கில் யுத்தத்துக்குப் பின் பல அபிவிருத்தித் திட்டங்கள் அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு.

“யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நாம் வடபகுதியில் மேற்கொண்டுள்ளோம்.”

இவ்வாறு அஞ்சல் சேவைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

யாழ்.வட்டுக்கோட்டையில் இன்று புதிய தபாலக கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“தபால் சேவை என்பது மக்களின் அவசியமான சேவையாகக் காணப்படுகின்றது.

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கவலைப்பட்டாலும் 2010 இற்குப் பின்னர் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

2009 இற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களுக்கு காரணமான அரசியல் காரணங்கள் பற்றி நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு திட்டங்களை நாம் வடபகுதியில் மேற்கொண்டுள்ளோம்.

சுபீட்சத்தின் நோக்கு என்ற எமது அரசின் திட்டத்தின் கீழ் வடபகுதியிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் கிராம மட்டங்களிலும், பிரதேச மட்டங்களிலும் இடம்பெற்று வருகின்றன.

கொரோனாத் தொற்று அச்சுறுத்தல் காலத்திலும் கூட தபால் சேவையானது மிகவும் சிறப்பாகச் செயற்பட்டது. இந்த வைரஸ் தொற்று காலத்திலும் கூட எமது தபால் சேவை ஊழியர்கள் தமது கடமையைச் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர். அதற்காக எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

யாழ்ப்பாணம் பிரதேசத்தை பொருத்தவரை விவசாயம், கல்வி, உயர் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளே மிக முக்கிய துறைகளாகக் காணப்படுகின்றன. அத்துடன் இந்தத் துறைகளை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையுள்ளது.

மேற்குறிப்பிட்ட இந்தத் துறைகளை ஒன்றிணைத்து முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பெரும் உதவியாக இருப்பது இந்தத் தபால் துறை என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன். ஒரு இணைப்புக் கருவியாகவே நான் தபால் துறையைக் காண்கின்றேன்.

எமது அரசானது வடபகுதி அபிவிருத்தி தொடர்பில் மிகவும் ஆர்வமாகச் செயல்படுகின்றது.

தபால் துறையை நவீனப்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 224 வருடங்கள் பழைமை வாய்ந்த தபால் துறையை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எவ்வாறு முன்னேற்றுவது என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.

உலக நாடுகளிலுள்ள தபால் துறையைப் போன்று நமது நாட்டிலும் அதிநவீன வசதிகளைக் கொண்ட வகையில் எமது நாட்டின் தபால் துறையை மேம்படுத்துவதற்கு பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.