மக்கள் மனநிலையை அறிய மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தவேண்டும் அரசு – ஆனந்த தேரர் வலியுறுத்து.

“மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தினால் அரசு தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியிலுள்ள நிலைப்பாட்டை நன்கு அறிந்துகொள்ள முடியும்.”

இவ்வாறு அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

“அரச நிர்வாகம் பலவீனமடைந்துள்ளது. அரச நிறுவனங்களின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்தாவிட்டால் பாரிய நெருக்கடிகள் ஏற்படும்” எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

அபயராம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“அமைச்சர்களான விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில ஆகியோர் இல்லாமலிருந்திருந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி குறுகிய காலத்தில் எழுச்சி பெற்றிருக்காது.

பொதுஜன முன்னணியின் எழுச்சிக்கு அபயராம விகாரை பல வழிமுறைகளில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. அபயராம விகாரை இருக்கின்றதா? இல்லையா? என்பதைக்கூட பொதுஜன முன்னணியின் ஒரு சில உறுப்பினர்கள் மறந்துவிட்டார்கள்.

முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச மாத்திரம் காலத்துக்கு ஏற்றால்போல் மாற்றமடையாமல் உள்ளார். தற்போதைய அரசியல்வாதிகள் இவரிடமிருந்து பல நல்ல விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அரச நிர்வாகம் பலவீனமடைந்துள்ளது. அரச திணைக்களங்கள், மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் மோசடியாளர்களாக மாறியுள்ளனர்.

ஒரு சிலருக்கு அரச நிர்வாகம் குறித்து எவ்வித முன்னனுபவங்களும் கிடையாது. இவ்வாறான நிலையில் அரச செயலொழுங்கை வினைத்திறனாக முன்னெடுக்க முடியாது. தகுதியானவர்களுக்கு உரிய பதவிகளை வழங்க அரசு கவனம் செலுத்த வேண்டும்.

மாகாண சபைத் தேர்தல் இலங்கைக்குப் பொறுத்தமற்றது. ஆகையால், மாகாண சபை முறைமையை முழுமையாக இரத்துச் செய்து, உள்ளூராட்சி சபைகளைப் பலப்படுத்துமாறு அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளோம்.

ஆனால், மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் பின்னணியில் சர்வதேச நாடுகளும் அழுத்தம் பிரயோக்கின்றன.

அரசு தொடர்பில் நாட்டு மக்கள் தற்போது கொண்டுள்ள நிலைப்பாட்டை மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். அரசின் ஒரு சில செயற்பாடுகள் கொள்கைக்கு முரணாகக் காணப்படுகின்றன.

தவறுகளைத் திருத்திக் கொண்டு அரச நிர்வாகத்தை சிறந்த முறையில் முன்னெடுக்க அரசு கவனம் செலுத்த வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.