நோயாளி வைத்தியசாலை செல்ல முன் அனுமதி தேவையே இல்லை! பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு.

“நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு முன் அனுமதி பெறவேண்டியதில்லை. சொந்த வாகனத்திலோ அல்லது பிற வாகனத்திலோ கொண்டு செல்ல முடியும்.”

இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர்ப் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் நோக்கிலேயே, சுகாதாரத் தரப்பினரின் ஆலோசனையின் பிரகாரம் பயணத்தடையை தளர்த்தாது, எதிர்வரும் 7ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் உரிய வகையில் பின்பற்றப்படுமானால் 8ஆம் திகதிக்கு பின்னர் கட்டம், கட்டமாக இயல்பு நிலைக்குச் செல்லக்கூடியதாக இருக்கும்.

நோயாளி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டுமெனில் எந்தவொரு அனுமதியும் தேவையில்லை. இந்தக் காலப்பகுதியில் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்கும்.

வாகனங்கள்மூலம் (டிலிவரி சேவை) நடமாடும் சேவைகளை முன்னெடுக்கும் தரப்பினருக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். டிலிவரி சேவையை முன்னெடுப்பதற்கு 31ஆம் திகதிவரை வழங்கப்பட்ட அனுமதி ஜுன் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே, அதனைப் புதுப்பிக்கவேண்டியதில்லை.

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பது தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வழிகாட்டல் அறிக்கையை ‘டிலிவரி’ செய்வதற்கு புத்தக விற்பனை நிலையம் முன்வந்தால் அதற்கான அனுமதி வழங்கப்படும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.