நாமலின் யாழ். வருகை விமர்சனத்துக்கு அங்கஜன் பதில்!

“அக்கறை உள்ளோர் எந்த மாவட்டத்துக்கும் சென்றும் பார்க்கலாம். அக்கறை இல்லாதோர் வீட்டிலிருந்து எதையும் கதைக்கலாம்” என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் யாழ். வருகை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அங்கஜன் இராமநாதனிடம், அமைச்சர் நாமல் ராஜபக்சவின் யாழ். வருகை தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாமல் ராஜபக்ச விளையாட்டுத்துறை அமைச்சர்தான். ஆனால், கொரோனா ஒழிப்பு செயலணியில் அவர் முக்கிய இடத்தில் உள்ளார். அவர் அனைத்து மாவட்டத்துக்கும் சென்று நிலைமைகளைப் பார்வையிடுகின்றார். அக்கறை உள்ளோர் எந்த மாவட்டத்துக்கும் சென்றும் பார்க்கலாம். அக்கறை இல்லாதோர் வீட்டிலிருந்து எதையும் கதைக்கலாம்.

மக்களை வந்து பார்ப்பவர்கள் மீது குறை சொல்லிக்கொண்டிருப்பது நியாயமற்றது. யார் வந்து பார்த்தாலும் எமது மக்களுக்கு உதவியாக இருக்கும். அவர் வந்து பார்த்ததால் மேலும் 50 ஆயிரம் ஊசிகளைப் பெற்றுக்கொள்ள வசதியாக இருக்கின்றது.

நாங்கள் குறை கூறுவதை விட்டுவிட்டு யார் வந்து பார்த்தாலும் எமக்கு நல்லதே என்பதை உணர வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.