தெல்லிப்பளை பிரதேச செயலகத்தினுள் கொரோனா! – இதுவரை 09 உத்தியோகத்தர்கள் அடையாளம்

தெல்லிப்பளைப் பிரேதச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனைகளின் அடிப்படையில் இன்று 8 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவில் கடமையாற்றும் 43 வயதான அச்சுவேலியைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில், அவர் பணியாற்றிய திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இன்று காலை முதல் தெல்லிப்பளை பிரதேச சுகாதார வைத்தியஅதிகாரி பணிமனையில் வைத்து அன்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே இன்று 8 உத்தியோகத்தர்களுக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாளாந்தம் பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் தேவை நிமிர்த்தம் வந்து செல்லுகின்ற குறித்த பிரதேச செயலகத்தில் சில பிரிவுகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் சுழற்சி முறையில் பணிக்கு அமர்த்தப்படாமல் தொடர்ச்சியாகப் பணிக்கு வருகை தந்துள்ளமையுடன், முதலாவதாகத் தொற்று இனங்காணப்பட்ட உத்தியோகத்தரும் இறுதியாக வருகை தந்த நாளுக்கு முதல் நாள் கொரோனாத் தொற்று அறிகுறியுடனே (காய்ச்சலுடன்) முக்கியமான வேலை ஒன்றைச் செய்து முடிக்குமாறு பணிக்கப்பட்ட நிலையிலேயே பிரதேச செயலகத்துக்கு வருகை தந்திருந்தார் என்று பிரதேச செயலக வட்டராங்கள் தெரிவிக்கின்றன.

ஏனைய பிரிவுகளின் உத்தியோகத்தர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கிடைக்கப்பெறும் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மேலும் பலருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்படலாம் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.