கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள்

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை சென்னையில் 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைபடுத்த மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் துறை ஆணையாளர் ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கோவிட் தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சென்னை காவல் துறை ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்ட ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் இரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜாரில் வணிக வளாகம், கொத்தவால்சாவடி சந்தை, ராயபுரம் சந்தை, அமைந்தகரை சந்தை, குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு, ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை, அமைந்தகரை மார்க்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திருவிக நகர் சந்திப்பு வரை மற்றும் ரெட் ஹில்ஸ் பகுதியில் ஆஞ்சநேயர் சாலை முதல் அம்பேத்கர் சிலை வரை ஆகிய இடங்களில் வணிக வாளங்கள் மற்றும் அங்காடிகள் இன்று(ஜூலை 31) முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை செயல்பட அனுமதி இல்லை. மேலும் கொத்தவால் சாவடி மார்க்கெட் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.