ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு அமைச்சரவை உபகுழுவைத் தவிர மாற்று வழிகள் இல்லை – ஜோசப் ஸ்டாலின் தெரிவிப்பு

“அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காக அரசு அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்துள்ளது. அமைச்சரவை உபகுழுவைத் தவிர மாற்று வழிகள் எவையும் இல்லை.”

– இவ்வாறு இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாம் கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி செயலாளர் பீ.பீ.ஜயசுந்தர தெரிவித்திருந்தார்.

இரண்டு வாரங்களில் அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார். அந்த ஆணைக்குழு இருக்கின்றதா? இல்லையா? என்று கேட்கின்றோம்.

அந்த ஆணைக்குழு இல்லையாயின் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக இருக்கும் ஒரு குழு இந்த அமைச்சரவை உபகுழுதான்.

சுமார் 2 இலட்சத்து 47 ஆயிரம் ஆசிரியர்கள் தெளிவான தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்று 32ஆவது நாளை எட்டியுள்ளது.

இந்தக் குழுவினூடாக எதிர்வரும் திங்கட்கிழமை அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதாக அமைச்சரவை உபகுழுவை நியமிக்கும்போது ஊடகங்கள் வாயிலாக அரச தரப்பினர் எமக்குத் தெரிவித்தனர்.

சகல தொழிற்சங்கங்களையும் வெவ்வேறாக சந்தித்து ஒரு தீர்மானத்தை எடுப்பதாகக் குறித்த உபகுழு நேற்று கூறியிருந்தது. இந்த நீண்டகால செயற்பாடு அவசியமா எனக் கேள்வி கேட்க விளைகின்றேன்.

சுபோதினி குழு அறிக்கையை செயற்படுத்துவதுடன் அதிபர், ஆசிரியர் சேவையை நிறைவு சேவையாக செயற்படுத்துவதே எமது கோரிக்கை.

இது தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அமைச்சரவைப் பத்திரம் காணப்படுகின்றது. கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரம் உள்ளது.

இந்த அமைச்சரவைப் பத்திரத்தைச் செயற்படுத்தவதற்குப் பதிலாகவே அமைச்சரவை உபகுழுவை நியமித்துள்ளனர். எனவே, இதனைக் காலம் தாழ்த்தும் செயற்பாடாக மாற்றுவதற்கு முயற்சித்தால் பாரிய பிரச்னையாகவே இதனைக் கருத வேண்டி வரும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.