தடுப்பூசி மூலம் மாத்திரம் கொரோனாவை அடக்க முடியாது! – சுகாதார ஒழுங்குவிதிகளையும் பின்பற்ற வேண்டும் என்கிறார் திஸ்ஸ விதாரண எம்.பி.

“தடுப்பூசிகளின் மூலம் மாத்திரம் நாட்டில் கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்திவிட முடியாது. மக்கள் சுகாதார ஒழுங்குவிதிகளை முறையாகப் பின்பற்றுவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.”

இவ்வாறு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கொரோனா வைரஸ் தொற்று தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஆபத்தான கொரோனா வைரஸின் திரிபான டெல்டா நாட்டில் தீவிரமாகப் பரவி வருகின்றது. இந்த விடயத்தில் நாங்கள் ஒருவருக்கொருவர் குறை கூறிக்கொண்டு செல்லாது, அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக இந்தப் பிரச்சினையில் செயற்பட வேண்டும்.

இந்த வைரஸ் எமது நாட்டில் வேகமாகப் பரவி வருகின்றது. டெல்டா என்ற திரிபு உருவான பின்னர் இது வேகமாகப் பரவி வருகின்றது.

இதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக நாங்கள் சிந்திக்க வேண்டும். இது ஒரு நபரில் இருந்து இன்னொரு நபருக்குப் பரவுகின்றது. இது தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். ஆனால், அரசு முன்னெடுக்கும் நடவடிக்கை போதுமானது இல்லை. கிராமிய மட்டத்தில் இது தொடர்பில் தெளிவுபடுத்தல்களை முன்னெடுக்க வேண்டும். அப்போதே மக்களிடையே இது தொடர்பில் தெளிவு ஏற்படும்.

எமது நாடு இப்போது சாதாரண நிலைமையில் இருக்கும் நாட்டைப் போன்றே இருக்கின்றது. இவ்வாறு இல்லாது தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தத் தேவையான சுகாதார ஒழுங்குவிதிகளை அனைவரும் தமது பாதுகாப்புக் கருதி பின்பற்ற வேண்டும்.

அனைத்து வகையான தடுப்பூசிகளிலும் ஒரு டோஸ் வழங்குவது போதுமானது அல்ல. குறைந்தது இரண்டு டோஸ்களை வழங்க வேண்டும். எனினும், தடுப்பூசியால் மட்டும் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாது. இதனால் எமது நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

இதேவேளை, இந்த விடயத்தில் நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சிகளில் குழுவை அமைத்து அந்தக் குழுவின் மூலம் சுகாதார அமைச்சருடன் தொடர்பை ஏற்படுத்தி நாட்டில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.