பரசூட் சாகச வீரர்களுடன் சென்ற விமானம் விழுந்து நொருங்கி 16 பேர் பலி!

ரஷ்யாவின் டாடர்ஸ்தான் பகுதியில் பரசூட் சாகச வீரர்களுடன் புறப்பட்ட விமானம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொருங்கியதில் 16 பேர் பலியாகினர். மேலும் ஆறு பேர் காயமடைந்தனர் என ரஷ்ய அவசரகால அமைச்சு தெரிவித்துள்ளது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் ஒரு இயந்திரம் செயலிழந்ததாக கட்டுப்பாட்டு அறைக்கு விமானிகள் அறிவித்தனர். இதனையடுத்து மென்செலின்ஸ்க் நகருக்கு அருகில் அவசர விமானத்தை அவசரமாக தரையிறங்க விமானிகள் முயன்றனர்.

மக்கள் வசிக்கும் பகுதியைத் தவிர்ப்பதற்காக விமானத்தை இடது பக்கம் திருப்ப விமானிகள் முயன்றனர். எனினும் தரையிறக்கும் முயற்சியின்போது விமானம் தரையில் விழுந்து பலமாக மோதியது என டாடர்ஸ்தான் பிராந்திய ஆளுநர் ருஸ்தம் மின்னிகனோவ் கூறினார்.

இந்த விமானத்தில் 20 பாராசூட் சாகச வீரர்கள் மற்றும் இரண்டு பணியாளர்கள் இருந்தனர். இவர்களில் 16 பேர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த ஆறு பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக ரஷ்ய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

விபத்தில் சிக்கிய எல் -410 இரட்டை எஞ்சின் குறுகிய தூர போக்குவரத்து விமானம் (The Let L-410 Turbolet twin-engine short-range transport aircraft ) மென்செலின்ஸ்க் நகரில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு சொந்தமானது. பரசூட் வீரர்கள் பயிற்சிக்காக இந்த விமானத்தை பயன்படுத்தியபோதே விபத்து இடம்பெற்றது. இந்நிலையில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் கடுமையான குற்றங்களை விசாரிக்கும் புலனாய்வுக் குழு குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்ய விமானப் பாதுகாப்புத் தர நிர்ணயங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. எனினும் அங்கு விபத்துகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.

அன்டோனோவ் அன் -26 (Antonov An-26)போக்குவரத்து விமானம் கடந்த மாதம் ரஷ்யாவின் தூர கிழக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். அத்துடன் இதே ரக இரட்டை இயந்திர விமானம் ஜூலை மாதம் கம்சட்காவில் விபத்தில் சிக்கியதில் 28 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.