பிரபல நகைக்கடையில் நகைவாங்குவது போல் டிராமா.. தங்கச் சங்கிலியுடன் ஓட்டம் பிடித்த மர்ம நபர்

வளசரவாக்கத்தில் நகை வாங்குவது போல் நடித்து ஊழியரை தள்ளி விட்டு நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை,வளசரவாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான பிரபல நகை கடை ஒன்று உள்ளது. இந்த நகை கடைக்கு நகை வாங்குவதற்கு வந்த டிப்டாப் ஆசாமி ஒருவர் சுமார் 3 தங்க செயின்கள் எடுக்க வேண்டும் என கூறி நகைகளின் மாடல்களை பார்த்துள்ளார். கடை ஊழியர்களும் நகைகளின் மாடல்களை காண்பித்தனர். பின்னர் மூன்று செயின்களை எடுத்த அந்த நபர் தனது வீட்டில் உள்ளவர்களிடம் காண்பித்துவிட்டு செயினை வாங்கி கொள்வதாக கூறியதையடுத்து நகை கடையில் இருந்து ஊழியர் ஒருவர் நகைகளை எடுத்து கொண்டு அந்த நபருடன் வெளியே வந்தார்.

வெளியே வந்த நபர் மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்தார். அப்போது ஊழியர் மோட்டார் சைக்கிளில் அமர வந்தபோது அவரிடம் இருந்த நகையை பறித்து கொண்டு அவரை கீழே தள்ளி விட்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த நகை கடை ஊழியர்கள் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபரின் உருவத்தை வைத்து தேடி வருகின்றனர். மர்ம நபர் எடுத்துச்சென்ற நகையின் மதிப்பு ரூ.1.80 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.