புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு சிறப்பாக அமல்படுத்தி வருகிறது – பாலகுருசாமி

இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் போன்ற திட்டங்கள் புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சம் என குறிப்பிட்டுள்ள அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி இந்தத் திட்டங்களை தமிழக அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் செயல்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திறன் சார்ந்த கல்வியும், பயிற்சியும் பாட திட்டத்தில் கட்டாயமாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இது, மாணவர்கள் தொழில் சார்ந்த படிப்புகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும். தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கைகள், கல்வியாளர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளன. ‘இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன்’ போன்ற திட்டங்கள், இளம் மாணவர்கள் கல்வியில் முன்னேற வழி வகுக்கும் திட்டங்கள். இந்த திட்டங்கள் எல்லாம், புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்கள்.

புதிய கல்வி கொள்கையை எதிர்த்தாலும், மறைமுகமாக அவற்றில் உள்ள முக்கிய பரிந்துரைகளை, தமிழக அரசு அமல்படுத்தி வருவது மிகச் சிறந்த நடவடிக்கை. தமிழகத்துக்கு என்று, மாநில கல்வி கொள்கை வகுப்பது சிறந்த முடிவு. இது, தேசிய கொள்கையை சார்ந்து இருக்க வேண்டும். தேசிய கல்வி கொள்கையானது, விரிவான சிறந்த உள்ளடக்கங்களை கொண்டது. இந்திய மாணவர்கள், 21 ஆம் நுாற்றாண்டின் சவால்களை சந்திக்கும் வகையில், இந்த கொள்கை அமைக்கப்பட்டுள்ளது.

இதை விட சிறந்த கொள்கையை, இன்னொரு கமிட்டி திட்டமிடுமா என்பது சந்தேகம். மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், பல்கலை மானியக்குழு, தேசிய மருத்துவ கமிஷன் ஆகியவற்றின் விதிகளின்படி, புதிய கல்வி கொள்கையை, மத்திய – மாநில பல்கலை கழகங்கள் அமல்படுத்த வேண்டியது கட்டாயம்.

இது குறித்து, அனைத்து பல்கலைகளுக்கும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வேளை நாம் இந்த கொள்கையை முழுமையாக பின்பற்றாவிட்டால், நம் மாணவர்கள் தேசிய கல்வி திட்டங்களில் இருந்து விலகி நிற்க வேண்டியது நேரிடும். தேசிய அளவில் வேலைவாய்ப்பு பெறுவதிலும், கல்வி அங்கீகாரம் பெறுவதிலும், பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். எனவே, புதிய கல்வி கொள்கையை முழுமையாக அமல்படுத்த வேண்டும் இவ்வாறு பாலகுருசாமி கூறியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்ப்பதாக கூறும் நிலையில், அண்மைக்காலமாக பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தி வரும் திட்டங்கள் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் இருப்பதாக தொடர்ச்சியாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கும் பாலகுருசாமி, தமிழக அரசு வெற்றிகரமாக புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் சில திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.