மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்களை திருடிச் சென்ற மூவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்!

மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் உதிரிப்பாகங்களை திருடிய 3 சந்தேக நபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

புதன்கிழமை (13) அதிகாலை வேளை கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பிரதான வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையத்தை உடைத்து திருடப்பட்டுள்ளதாக பெரியநீலாவணை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.

இதன் பிரகாரம் குறித்த மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான உதிரிப்பாகங்களை நுதனமாக திருடி வந்த சந்தேக நபர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டதுடன் அதில் மூவரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்து கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

அத்துடன் இச்சம்பவத்தில் குறித்த மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் 13 வருட காலமாக வேலை செய்து வந்தார் எனக் கூறப்படும் நபர் ஒருவரும் தனது சக நண்பர்களுடன் இணைந்தே அதிகாலை குறித்த கடையை உடைத்து உதிரிப்பாகங்களை உர மூடைகளில் கட்டிக்கொண்டு செல்ல தயாரான நிலையில் ஒருவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் ஏனைய சந்தேக நபர்கள் பொதுமக்களினால் பிடிக்கப்பட்ட சந்தேக நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிஸாரினால் பெரியநீலாவணை மயானத்துக்கு அருகில் மறைந்து இருந்த வேளை கைதாகினர். மற்றுமொருவர் தலைமறைவாகி உள்ளதாகவும் அச்சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் திருடப்பட்ட உதிரிப்பாகங்களை சந்தேக நபர்கள் மூட்டை மூட்டையாக அதிகாலை வேளை எடுத்துச் சென்ற நிலையில் வீதியில் நின்றவர்கள் சந்தேகத்துக்கிடமான விசாரித்தபோது இந்த விடயம் தெரிய வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஜீ.துசார திலங்க ஜெயலால் வழிநடத்தலில் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான டி.டினேஸ் தலைமையிலான குற்றத் தடுப்பு பிரிவினர் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தேடி கைது செய்ததுடன் திருட்டு சம்பவத்துக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் இரண்டையும் கைப்பற்றினர்.

அத்துடன் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் மீட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்கள் சுமார் 19 மற்றும் 24 வயதுடையவர்கள் எனவும் பெரியநீலாவணை சேர்ந்தவர்கள் என பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் கைதான 3 சந்தேக நபர்களை புதன்கிழமை(13) மாலை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை 14 நாட்கள் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.