ராஜபக்சக்களுடன் சேர்த்து ரணிலையும் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பவேண்டும் ஜே.வி.பியின் தலைவர் வலியுறுத்து.

“ராஜபக்சக்களுடன் சேர்த்து புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பவேண்டும்.”

– இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“மக்களால் நிராகரிக்கப்பட்டவரே ரணில் விக்கிரமசிங்க. மக்களால் தற்போது விரட்டப்படுபவரே கோட்டாபய ராஜபக்ச. இவ்விருவரும் இணைந்து நடந்தும் ஆட்சி ஏற்றுக்கொள்ளக்கூடியதா? இது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரான நியமனமாகும். ரணில் கோட்டாவை நம்புகின்றார். கோட்டா ரணிலை நம்புகின்றார். ஆனால், இவ்விருவரையும் மக்கள் நம்பவில்லை. எனவே, ராஜபக்சக்களுடன் சேர்த்து ரணிலையும் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பவேண்டும்.

2018 இல் ஆட்சிக் கவிழ்ப்பு சூழ்ச்சி இடம்பெற்றது. மஹிந்த ராஜபக்சவைப் பின்கதவால் அழைத்து வந்து பிரதமராக்கினார் மைத்திரிபால சிறிசேன. இன்றும் அதற்கு ஒப்பானதொரு செயல்தான் நடந்துள்ளது. தமது முகாமுக்கு எதிராகச் செயற்பட்டவரை அழைத்து கோட்டா பிரதமராக்கியுள்ளார். இது மக்கள் ஆணையை மீறும் செயலாகும்.

வெள்ளை வான் கலாசாரத்தை ஆரம்பித்தவர்களுடன் இணைந்து ரணிலால், எப்படி ஜனநாயகத்துக்காகக் குரல் கொடுக்க முடியும்?

எனவே, குறுகிய காலப்பகுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அனைத்துக் கட்சிகளினதும் நிலைப்பாடு இதுதான்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.