காணாமல்போன குடும்பப்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு! கொலையா? தற்கொலையா?

மாத்தளை மாவட்டம், கலேவெல பொலிஸ் பிரிவில் வீடொன்றுக்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்து குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான ஆர்.எம்.பத்மலதா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நேற்றுமுன்தினம் இரவு முதல் காணாமல்போயுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் அருகில் உள்ள வீட்டுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்றிருந்தார் என்று உயிரிழந்த பெண்ணின் கணவர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மறுநாள் காலை வரை மனைவி வீடு திரும்பாத காரணத்தால், வீட்டுக்கு முன்னால் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றுக்கு அருகில் மனைவியின் காலணி இருப்பதைக் கண்டு, கிராம மக்களுடன் சேர்ந்து கிணற்றில் தேடினார் என்றும் கணவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.