யாழ். பல்கலையில் செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல்.

செஞ்சோலைப் படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப் படையினர் மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் பாடசாலை மாணவிகள் 54 பேரும், பணியாளர்கள் 7 பேருமாக 61 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். மேலும், அந்தக் கொடூர தாக்குதலில் 150 இற்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்திருந்தனர்.

செஞ்சோலைப் படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல், யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான தூபியில் இன்று முற்பகல் 11:30 மணியளவில் அனுஷ்டிப்பட்ட்து.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது.

இதன்போது, படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களின் திருவுருவப் படத்துக்கு ஈகைச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜகுமார் செஞ்சோலைப் படுகொலை தொடர்பாக நினைவுரையாற்றினார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், மாணவர்கள் எனப் பலரும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.