அடக்குமுறையை உடன் நிறுத்துக! – அரசிடம் அநுர வலியுறுத்து.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ராஜபக்ச அரசும் முன்னெடுத்து வரும் ஜனநாயக விரோத அடக்குமுறைச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.”

இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. வலியுறுத்தினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக தேடிய அறிய மருதானை பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்த போதே அவர் இதனை ஊடகங்களிடம் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உள்ளே தள்ள வேண்டியவர்கள் வெளியில். வெளியில் இருக்க வேண்டியவர் உள்ளே இருக்கின்றனர். இது மிகவும் அமைதியான ஆர்ப்பாட்டம். எவரும் சீர்குலைக்கும் வகையில் நடந்துக்கொள்ளவில்லை.

ரணில் விக்ரமசிங்கவும் ராஜபக்சவினரும் நாட்டின் ஜனநாயகத்தை முழுமையாகக் குழித்தோண்டிப் புதைத்து அச்சத்தில் பதுங்கு குழிகளில் வாழும் தலைவர்களாக மாறவே திட்டங்களை வகுத்துள்ளனர்.

இதனால், மிக மோசமான, ஜனநாயக விரோத சர்வாதிகார வெறியை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ராஜபக்ச அரசுக்கும் கூறுகின்றோம்.

ரணில் தரப்பினர் இன்று இதனைத் தடுத்து நிறுத்தி இருக்கலாம். எதிர்காலத்தில் கொழும்புக்கு வரப்போகும் இலட்சக்கணக்கானவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது.

85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டு வரும் இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக மக்களை அணித்திரட்டுவோம்.

இதனால், மக்களுக்கு அஞ்சி ஒழியும் இடங்களைத் தேடிக்கொள்ளுமாறு ரணிலுக்கும் தாக்குதல் நடத்துபவர்களுக்கும் நாங்கள் கூறுகின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.