அரசமைப்பு பேரவை ஊடாகத் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்ற நடவடிக்கை! – சஜித் குற்றச்சாட்டு.

“உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போடும் புதிய முயற்சியாக இன்று கூடும் அரசமைப்பு பேரவை ஊடாகத் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசின் இந்தச் சதிகளை ஜனநாயக ரீதியாகத் தோற்கடிப்போம்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் கூறுகையில்,

“பல மாதங்களாக இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் அரசுடன் தொடர்புடைய தரப்புக்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தடுக்கவும், சீர்குலைக்கவும் பெரும் சதியில் ஈடுபட்டன. ஒரு கட்டத்தில் அமைச்சரவை மேற்கொண்டதாக பொய்யான தீர்மானங்கள், மோசடித் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை ஏற்காதிருக்கும் துரோக நடவடிக்கையில் அரசு ஈடுபட்டது. மற்றுமொரு சந்தர்ப்பத்தில் திறைசேரியின் செயலாளர் மூலம் தேர்தலுக்கான பணத்தை வழங்க முடியாது என்றும், அரசிடம் பணமில்லை என்றும், சமூக நலப்பணிகள் உட்பட சம்பளம் வழங்குவதற்குக் கூட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அரசு, தேர்தலை ஒத்திவைக்கப் புதிய சூட்சுமத்துக்குத் தயாராகின்றது.

இந்தத் தேர்தலைச் சீர்குலைக்கும் புதிய நடவடிக்கையாக நாளை (25) அரசமைப்பு பேரவையின் ஊடாகத் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்றியமைத்து தேர்தல் ஆணைக்குழுவைச் சீர்குலைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மக்களின் இறையாண்மையில் கை வைத்தால் அதற்கு வழங்கும் தண்டனை நாட்டின் சட்டப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால் அமைச்சரவை தீர்மானம் மற்றும் திறைசேரி செயலாளர் ஊடாக மக்கள் இறையாண்மையை நாசம் செய்யும் முயற்சிகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றம் செல்லும்.

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலைச் சீர்குலைக்க அரசமைப்பு பேரவைக் கூட்டத்தைப் பயன்படுத்தினால், நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் வகையில் அந்தச் சூட்சும நடவடிக்கையை நிச்சயம் தோற்கடிப்போம். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

அதேபோல், நாளை கூடும் அரசமைப்பு பேரவைக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் தேர்தலை ஒத்திவைக்கும் சதித்திட்டங்களைச் சேர்க்க வேண்டாம் எனவும், சுயாதீனமான தேர்தல் ஆணைக்குழு பிரதிநிதிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எதையும் செய்யக் கூடாது எனவும் அரசமைப்பு பேரவையின் பொறுப்பு வாய்ந்த பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் இந்நாட்டில் மக்களின் இறையாண்மையைக் கெடுக்கும் சகல சதிகளையும் முறியடிக்கத் தலைமைத்துவம் வழங்குவேன். மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க எந்நேரத்திலும் முன்வருவேன்.

தேர்தல் அவசியம் என அன்று நான் கூறிய போது சேறுபூசும் விதமாக குரல் எழுப்பியவர்கள் தற்போது தேர்தலை நடத்துமாறு கோருகின்றனர். தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் அனைத்து முயற்சிகளையும் தோற்கடிக்கத் தலைமைத்துவம் வழங்குவேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.