அனுமன் கோவிலில் கஞ்சா பிரசாதம்… மத்தியப் பிரதேசத்தில் விநோத வழிபாடு..

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அனுமன் கோவிலில் நைவேத்தியமாகக் கஞ்சா படைக்கப்படுகிறது.

மத்தியப் பிரதேசம் சித்ரகூட் பகுதியில் அமைந்துள்ள அனுமன் கோவில் அப்பகுதி பிரசித்தி பெற்ற கோவிலாகத் திகழ்கிறது. அதற்குக் காரணம் இந்த கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் தான். அனுமனுக்கு நைவேத்தியமாகக் கஞ்சா படைக்கப்படுகிறது. மேலும், அனுமனுக்குப் படைக்கப்பட்ட கஞ்சா கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குப் பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.

பொதுவாக அனுமன் கோவில்களில் பிரசாதமாகவும், நைவேத்தியமாகவும் லட்டு, பூந்தி, அடை அல்லது துளசி போன்றவை தான் முதன்மையான பிரசாதமாக வழங்கப்படும். ஆனால் இந்த கோவிலில் வித்தியாசமாகக் கஞ்சா வழங்கப்படுகிறது. மேலும், ஸ்ரீ ராமர் வனவாசம் சென்றிருந்த போது குறிப்பிட்ட காலத்திற்குச் சித்திரகூடத்தில் வசித்தார் என்று கூறப்படுகிறது. அதனையடுத்து இந்த பகுதியில் அனுமனுக்குக் கோவில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அனுமான் சாலீஸாவை பாராயணம் செய்வதில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சித்திரக் கூட ஆஞ்சநேயர் கோவிலும் ஒன்று. கஞ்சா பிரசாதம் என்பது சிவபெருமான் மற்றும் ஆஞ்சநேயர் இருவரையுமே மகிழ்ச்சியாக்கும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடையே இருக்கிறது.

காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து அனுமன் சாலிசாவை பாராயணம் செய்து ஆர்த்தியில் பங்கேற்று தங்களால் இயன்றதைத் தானமாகக் கொடுத்து வழிபட்டுச் செல்கிறார்கள். இந்த கோவிலில் காலையில் செய்யப்படும் அனுமன் ஆரத்தி பூஜையில் லட்டு பிரசாதமாகவும், அதற்குப் பிறகு நடைபெறும் பூஜையில் பழங்கள் பிரசாதமாகவும், நண்பகல் பூஜையில் கஞ்சா பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.