கட்சி யாப்பின்படி செயற்படுவதுதான் சரியான முறை எனக் கருதுகின்றேன்! – சுமந்திரன் எம்.பி. கூறுகின்றார்.

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பில் இருக்கின்ற விடயங்கள் சரியாக பின்பற்றப்படவில்லை என நீதிமன்றில் சுட்டிக்காட்டப்படுமாக இருந்தால் பொறுப்பான அரசியல் கட்சியாக அதனைத் திருத்தி யாப்பின்படி செயற்படுவதுதான் சரியான முறை என்று நான் கருதுகின்றேன்.”

இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

“இந்து சமுத்திரத்திலே இந்தியாவின் பாதுகாப்பு என்பது நியாயமானது. ஆகவே, சீன ஆக்கிரமிப்பையும் சீனா இங்கு தொடர்ந்து நிலைகொள்வதையும் நாங்கள் விரும்பவில்லை” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட சிலரை நேற்று (16) இரவு யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“இங்கு இருக்கக்கூடிய விசேட பிரச்சினைகள் குறித்து இந்திய தூதரருடன் கலந்துரையாடி இருக்கின்றோம். இந்திய மீனவர் பிரச்சினை சம்பந்தமாக அவரிடம் குறிப்பிட்டிருந்தேன். அது பற்றி தான் இந்தியப் பிரதமருக்கு ஏற்கனவே கடிதம் ஒன்று எழுதி இருப்பதாகவும் இது விரைவிலே தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளார் எனவும் இந்தியத் தூதுவர் கூறினார்.

வடக்கில் இருக்கக்கூடிய சீன கடலட்டைப் பண்ணைகள் மூலம் மீனவர்களுடைய வாழ்வாதாரம் பறிக்கப்படுகின்றது. இதனைப் பற்றி யாரும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது கவலையளிப்பதாகத் தூதுவர் தெரிவித்தார்.

எங்களுடைய மீனவர்கள் கடலிலே தங்கள் தொழிலை செய்ய முடியாத அளவுக்குக் கடற் படுக்கைகள் சீனாவின் கடலட்டைப் பண்ணைகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்பதனை அவருக்கு நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.

சீனாவின் வருகை சம்பந்தமாக நாங்கள் பகிரங்கமாக எங்கள் நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றோம். நாடாளுமன்றத்தில் கூட அது பற்றி பேசி இருக்கின்றேன். இலங்கை தென் சீனக் கடலிலே இருந்திருக்குமாக இருந்தால் நாங்கள் சீனாவினுடைய பாதுகாப்பைப் பற்றி கரிசனை கொண்டிருப்போம். ஆனால், இலங்கை இருப்பதோ இந்தியாவில் இருந்து 30 கிலோமீற்றர் அருகிலே, இந்து சமுத்திரத்திலே. இந்தியாவின் பாதுகாப்பு என்பது நியாயமானது. ஆகவே, நாங்கள் சீன ஆக்கிரமிப்பையும் சீனா இங்கு தொடர்ந்து நிலைகொள்வதையும் விரும்பவில்லை என்பதனை இந்தியத் தூதுவருக்கு உறுதிப்படத் தெளிவாகச் சொல்லி இருக்கின்றேன்.

இந்தியத் தூதுவருடான இந்தச் சந்திப்பு மிகவும் ஆரோக்கியமானதாகவும் வெளிப்படைத் தன்மை வாய்ந்ததாகவும் இருந்தது. எங்களுடைய கரிசனைகள், அவர்களுடைய கரிசனைகள் இந்த இரண்டையும் ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொண்டவர்களாக ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகச் செயற்பட வேண்டும் என்ற கருத்துக்கு உடன்பட்டிருக்கின்றோம்.” – என்றார்.

‘இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய தேசிய மாநாட்டுக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நீதிமன்றங்கள் தடை விதித்திருக்கின்றன. இது தொடர்பில் கட்சியின் ஊடகப் பேச்சாளர் என்ற வகையில் உங்கள் கருத்து என்ன?’ – என்று ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சுமந்திரன் எம்.பி.,

“யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தால் எங்களுடைய நிர்வாகச் செயலாளருக்குக் கொடுக்கப்பட்ட ஆவணத்தைப் பார்வையிட்டிருந்தேன். திருகோணமலை நீதிமன்ற ஆவணம் இன்னும் யாரிடமும் சேர்க்கப்படவில்லை.

கட்சி யாப்பிலே இருக்கின்ற சில சரத்துக்கள் மீறப்பட்டுள்ளன எனக் குற்றம் சுமத்தியே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியான யாப்பு மீறல்கள் இருக்குமாக இருந்தால் அதனை நிவர்த்தி செய்து நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்லலாம் என்பதே என்னுடைய கருத்து.

ஏனென்றால் ஒரு கட்சியினுடைய நடவடிக்கையைக் கட்டுப்படுத்துவது அல்லது முறைப்படுத்துவது அந்தக் கட்சியினுடைய யாப்பு மட்டுமே. பல தடவைகளிலே நாங்கள் சில விடயங்களைக் கவனிப்பதில்லை. அப்படிக் கவனிக்காமல் இருக்கின்றபோது அது பழக்கமாக வந்துவிடும். ஆனால், யாராவது அதைச் சவாலுக்கு உட்படுத்தினால்தான் அந்தப் பிரச்சினை வெளிப்படும். ஆகவே, யாப்பில் இருக்கின்ற விடயங்கள் சரியாகப் பின்பற்றப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்படுமாக இருந்தால் பொறுப்பான அரசியல் கட்சியாக அதனைத் திருத்தி யாப்பின்படி செயற்படுவதுதான் சரியான முறை என்று நான் கருதுகின்றேன்.” – என்றார்.

‘வழக்குத் தொடர்பிலே தமிழரசுக் கட்சியினுடைய முன்னாள் தலைவர்கள், இந்நாள் தலைவர்கள் யாரேனும் உங்களுடன் கலந்துரையாடி இருக்கின்றார்களா?’ என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”யாரும் என்னுடன் இந்த வழக்குச் சம்பந்தமாக கலந்துரையாடவில்லை” – என்றும் அவர் தெரிவித்தார்.

கிழக்கில் கடலில் மூழ்கிய மாயமான இரு மாணவர்களும் சடலங்களாக மீட்பு!

போலி காணொலிகளை பரப்புவோர் மீடு கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

தில்லி நேரு விளையாட்டு அரங்கம் அருகே கட்டடம் இடிந்து விழுந்து 8 பேர் காயம்

பலாலி விமான நிலைய விரிவுபடுத்தலுக்காக 500 ஏக்கர் காணி சுவீகரிப்பு என்பது தவறாம்! – இந்தியத் தூதரைச் சந்தித்த பின் விக்கி தகவல்.

சாய்ந்தமருது மாணவர்கள் இருவர் நிந்தவூர் கடலில் மூழ்கி மாயம்!

இன்சாட்-3 டிஎஸ் செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப்-14

தீவிர போராட்டம்; விவசாயி, போலீஸ்காரர் பலி – காரணமான கண்ணீர் புகைகுண்டு?

யாழில் எம்.பிக்கள், புத்திஜீவிகளை நேரில் சந்தித்த இந்தியத் தூதுவர்!

Leave A Reply

Your email address will not be published.