இஸ்ரேலியப் பிரதமருக்கும் ஹமாஸ் தலைவர்களுக்கும் கைதாணை பிறப்பிக்க கோரிக்கை.

போர்க் குற்றங்களுக்காகவும் மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்களுக்காகவும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுக்கும் ஹமாஸ் கிளர்ச்சி அமைப்பின் தலைவர்களுக்கும் கைதாணைகளைப் பிறப்பிக்க தாம் கோரியுள்ளதாக அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்ற அரசுத்தரப்பு வழக்கறிஞர் கரிம் கான் கூறியுள்ளார்.

அவர் திங்கட்கிழமை (மே 20) வெளியிட்ட அறிக்கையில், ஹமாஸ் அமைப்பின் யஹ்யா சின்வார், முகம்மது டெய்ஃப், இஸ்மாயில் ஹனியே ஆகியோருக்கு கைதாணைகளைப் பிறப்பிக்க தாம் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.

திரு நெட்டன்யாகு, இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் யோவேவ் கெலன்ட் இருவருக்கும் கைதாணை பிறப்பிக்க தாம் கோரியுள்ளதாகவும் திரு கான் சொன்னார்.

திரு கானின் முடிவு “மூர்க்கமானதற்கு அப்பாற்பட்டது” என இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்ஸோக் சாடினார்.

இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், திரு கானின் செயலை “அவதூறானது” என வர்ணித்தார்.

ஹமாஸ் தலைவர்களைக் கைது செய்ய திரு கானின் முயற்சியை சாடிய ஹமாஸ், “பலியானவரை மரண தண்டனையை நிறைவேற்றுபவருடன் சமப்படுத்துவதாக” கூறியது.

திரு கானின் கோரிக்கைக்கு அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றாலும், நெட்டன்யாகு அரசாங்கத்துக்கு இது பின்னடைவு எனக் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.