அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கொரோனாத் தடுப்பு வழிகாட்டல் முன்னெடுப்பு : ஆளுநர் சார்ள்ஸ்

அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும்
கொரோனாத் தடுப்பு வழிகாட்டல் முன்னெடுப்பு

– வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸ் பணிப்பு 

“வடக்கு மாகாணத்தில் அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கொரோனாத் தடுப்பு வழிகாட்டல்களைப்  பின்பற்றுவதை உறுதி செய்வதோடு விழிப்புணர்வுகளையும் மேற்கொள்ள வேண்டும்.”

– இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்று இடர் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி, பொலிஸார் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:-

“சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி, எமது நாட்டின் பொருளாதார நடவடிக்கைளை இலகுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய முறைகளைத் தீர்மானிக்கவேண்டும்.

அத்துடன் அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கிராம சேவையாளர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் பொலிஸாரை ஒன்றிணைத்துக் கொரோனாத் தடுப்பு சுகாதார வழிகாட்டல்களை முறைப்படி கடைப்பிடித்தல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வைத்தியசாலைக் கழிவுகளை அகற்றும் முறை தொடர்பாக பொதுவான ஒரு திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். அத்துடன் மாணவர்களிடையேயும் கொரோனா சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

அரச மற்றும் தனியார் பஸ்களில் பதிவு செய்யப்பட்ட குறித்த பஸ்ஸின் இலக்கத்தை உட்புறத்தில் கட்டாயமாகக்  காட்சிப்படுத்த வேண்டும். பயணிகள் தாம் பிரயாணம் செய்யும் பஸ்ஸின் இலக்கத்தை இலகுவாகக் குறித்து வைக்க வேண்டும்.

கடந்த காலங்களை விட தற்போது வடக்கு மாகாணத்தில் வீதி விபத்துக்கள் பெருமளவு குறைவடைந்துள்ளதுடன் வீதி பாதுகாப்பு நடவடிக்கைகளும் சட்டரீதியாக கடைப்பிடிக்கப்படுகின்றது. இதனைச் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்திய பொலிஸாருக்கு எனது பாராட்டுக்கள்.

சட்ட ரீதியற்ற முறையில் நடைபெறும் மண் அகழ்வு மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கும் உரிய சட்ட நடவடிகைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும்” – என்றார்.

இதேவேளை, வடக்கில் மாவட்ட ரீதியாக டெங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுநர் வினவியபோது, அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு பரவல் கட்டுப்பாட்டில் இருக்கின்றது எனச் மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.