3 வயது மகனை விற்க முடியாத விரக்தியில் கொலை செய்த தந்தை!

இந்தியாவில் தந்தை ஒருவர் தனது 3 வயது மகனை விற்க முயன்று முடியாமல் போனதால், விரக்தியில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் உத்தர பிரதேசம் மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் தனோரா எனும் கிராமத்தில் நடந்துள்ளது.

தினக்கூலியான மொஹத் நவுஷத், தான் குடிப்பதற்கும், சூதாடுவதற்காகவும் தனது 3 வயது மகனை ரூ. 3 லட்சத்துக்கு விற்க முயன்று வந்துள்ளார். அதற்காக குழந்தையை பணம் கொடுத்து வாங்கும் தரகர்களை தேடிவந்துள்ளார். அப்படி யாரும் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்துவந்துள்ளார்.

இதன் காரணமாக அவருக்கும் அவரது மனைவிக்கும் தினமும் சண்டை ஏற்பட்டுள்ளது. நவுஷத்தின் மனைவி தனது குழந்தையை காப்பாற்றிக்கொள்ள தினமும் போராடிவந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை, நவுஷத் தனது மனைவியை மொபைல் சார்ஜர் கடன் வாங்கி வருமாறு பக்கத்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார். நவுஷத் மீது சந்தேகம் இருந்ததால், சார்ஜரை வாங்கிக்கொண்டு வேகமாக ஓடி வந்துள்ளார்.

அவர் வந்து பார்த்தபோது, குழந்தை பேச்சு மூச்சின்றி மயங்கிக் கிடந்துள்ளது. பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார், ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இதனால் கோபமடைந்த நவுஷத்தின் தந்தை பொலிஸில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து பொலிஸார் நவுஷத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.