வெலிசறவில் வாகன விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு விளக்கமறியல்.

நேற்று (04) வெலிசற பிரதேசத்தில் இடம்பெற்ற கோர வாகன விபத்து தொடர்பில், மஹபாகே பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 16 வயதான மகன் மற்றும் தந்தை ஆகியோரை, எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் வெலிசற, பொது மயானத்துக்கு அருகாமையில், நேற்று (04) கொழும்பிலிருந்து நீர்கொழும்பு திசையாகப் பயணித்த அதி சொகுசு கார் ஒன்று, வீதியை விட்டும் விலகி, எதிர்த் திசையில் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்களையும், முச்சக்கர வண்டியொன்றையும், கார் ஒன்றையும் மோதி விபத்துக்குள்ளாக்கியது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மஹபாகே பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் ஐவர் காயமடைந்து, ராகம போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த விபத்துக்குக் காரணமாக இருந்த அதி சொகுசு காரைச் செலுத்திய 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டதுடன், வர்த்தகரான குறித்த சிறுவனின் தந்தையும், மஹபாகே பொலிஸாரினால், நேற்று (04) கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.