ஓய்வூதிய சம்பளக் கொடுப்பனவை கொள்ளையடிக்க அரசு சதித் திட்டம் சஜித் குற்றச்சாட்டு.

நாட்டிலுள்ள அப்பாவி ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதிய சம்பளத்தை தன்னிச்சையாகக் கொள்ளையடிக்க அரசு முடிவு செய்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஓய்வூதியக்காரர்களின் பணத்தை அக்ரஹார காப்பீட்டில் வரவு வைக்கும் போர்வையில் கொள்ளையடிக்க அரசு தீர்மானித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சம்பளத் துண்டிப்பை மேற்கொள்வதற்கு ஓய்வூதிய சமூகம் இரண்டு வாரங்களுக்குள் விருப்பமா? இல்லையா? என்பதைக் குறிப்பிடத் தவறினால், அரசு அந்தப் பணத்தைக் குறைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசு ஆட்சிக்கு வந்தவுடனே பணக்காரக் குபேரர்களுக்குக் கோடிக்கணக்கான ரூபா வரிச்சலுகையை வழங்கியது. இதனால் அரச வருவாயை முற்றிலுமாக இழந்த அரசு, இதன் இழப்பை ஈடுகட்ட முயல்வது இந்த நாட்டுக்காகத் தங்கள் கடின உழைப்பையும் அறிவையும் அர்ப்பணித்து நாட்டுக்குப் பல ஆண்டுகளாக சேவை செய்து, ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரஜைகளிடமிருந்துதான். இந்தக் கொடூர செயலுக்கு எதிராக நிபந்தனையின்றி நடவடிக்கை எடுப்போம்.

அக்ரஹார காப்பீட்டை வலுப்படுத்துவது என்ற போர்வையின் பெயரில் சூட்சமமாக இந்த நாட்டிலுள்ள இலட்சக்கணக்கான ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியத்தைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

01.01.2016 இற்கு முன்னர் ஓய்வுபெற்ற 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து 600 ரூபாவைக் குறைப்பதற்கும், 70 வயதுக்குட்பட்டவர்களிடம் இருந்து 400 ரூபாவைக் குறைப்பதற்கும் அரசு இவ்வருடம் ஒக்டோபர் 29 ஆம் திகதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.