இரத்த தட்டுக்களுக்கு பதிலாக பழச்சாற்றை ட்ரிப்ஸ் மூலமாக ஏற்றப்பட்டதால் நோயாளி மரணம்!

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.

இரத்த தட்டுக்களுக்கு பதிலாக சாத்துக்குடி பழச்சாற்றை நோயளிக்கு ட்ரிப்ஸ் மூலமாக ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதச மாநிலமே பிரயாக்ராஜில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டெங்கு நோயாளிக்கு ரத்த தட்டுகளுக்கு (blood platelets) பதிலாக பழச்சாறு ஏற்றப்பட்டதால் நோயாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

32 வயதான நோயாளியின் உறவினர்கள் பிரயாக்ராஜில் உள்ள குளோபல் மருத்துவமனை மற்றும் அதிர்ச்சி மையத்தில் (Global Hospital and Trauma Centre) ‘பிளாஸ்மா’ என்று குறிக்கப்பட்ட ஒரு பையில் சாத்துக்குடி பழச்சாறு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனையால் வழங்கப்பட்ட பைகளில் ஒன்றில் இருந்து ரத்தத்தட்டு மாற்றம் செய்யப்பட்ட பிறகு நோயாளியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து நோயாளி வேறொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டார்.

இதையடுத்து, இதற்கு காரணமானவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளியின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மருத்துவமனை அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இவ்வாறு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டு, அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

தலைமை மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டு, மாதிரி பரிசோதனை செய்யப்படும் வரை அப்படியே இருக்கும் என்று பிரயாக்ராஜ் கூடுதல் தலைமை மருத்துவ அதிகாரி ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மருத்துவமனை, பிளேட்லெட்டுகள் நோயாளிகளின் உறவினர்களால் வாங்கப்பட்டதாகக் கூறியுள்ளது. மருத்துவமனையின் உரிமையாளர், நோயாளியின் பிளேட்லெட் அளவு 17,000 ஆகக் குறைந்துள்ளது, அதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் இரத்தத் தட்டுக்களை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

“அவர்கள் ஒரு அரசு மருத்துவமனையில் இருந்து ஐந்து யூனிட் பிளேட்லெட்களைக் கொண்டு வந்தனர். மூன்று யூனிட்களை மாற்றிய பிறகு, நோயாளிக்கு எதிர்வினை ஏற்பட்டது. எனவே நாங்கள் அதை நிறுத்தினோம்,” என்று மருத்துவமனை உரிமையாளர் ஒரு அறிக்கையில் கூறினார், மேலும் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.