10 வருட அதிமுக ஆட்சியில் தமிழகத்தையே சீரழித்துவிட்டார்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடந்த அதிமுக ஆட்சியில் 10 வருடமாக சென்னை மட்டுமல்லாது தமிழகத்தையே சீரழித்து விட்டார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி நிலையில், ஆங்காங்கே தொடர்ந்து 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் தொடர்ந்து 3வது நாளாக விடிய விடிய மழை பெய்து வருகிறது.இதனால் சென்னையில் ஆங்காங்கே மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இன்னும் சிலர் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில கட்டுப்பாட்டு அறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் 10 வருடமாக சென்னையை மட்டுமல்லாது தமிழகத்தையே சீரழித்து விட்டார்கள் என்றும், இதனை சரி செய்ய வேண்டும் என்றால் ரொம்ப வருடம் ஆகும். ஆனால் ஒன்றரை வருடத்திற்குள் சரி செய்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும், வட சென்னையில் தண்ணீர் தேங்கி இருப்பதாக புகார் வந்திருக்கிறது என கூறிய அவர், தொடர்ந்து அதனை அப்புறப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.